சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
பன்னிரெண்டாம் திருமுறை
இரண்டாம் காண்டம்
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
11.1 பத்தராய்ப் பணிவார் புராணம்
4152
ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால்
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்.
1
4153
தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும்
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார்
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்.
2
4154
அங்கணனை அடியாரை ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார்
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள்
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்.
3
4155
யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார்
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால்
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில்
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால்.
4
4156
சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய்
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால்
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார்
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்.
5
4157
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக்
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்.
6
4158
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார்.
7
4159
சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால்
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார்
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப்
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்.
8
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

11.2 பரமனையே பாடுவார் புராணம்
4160
புரம் மூன்றும் செற்றானைப் பூணாகம் அணிந்தானை
உரனில் வரும் ஒரு பொருளை உலகு அனைத்தும் ஆனானைக்
கரணங்கள் காணாமல் கண் ஆர்ந்து நிறைந்தானை
பரமனையே பாடுவார் தம் பெருமை பாடுவாம்.
1
4161
தென் தமிழும் வட கலையும் தேசிகமும் பேசுவன
மன்றின் இடை நடம் புரியும் வள்ளலையே பொருள் ஆக
ஒன்றிய மெய் உணர் வோடும் உள் உருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார்.
2
திருச்சிற்றம்பலம்


11.3 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
4162
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து
பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து
ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள்
ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்.
1
திருச்சிற்றம்பலம்


11.4 திருவாரூர் பிறந்தார் புராணம்
4163
அருவாகி உருவாகி அனைத்துமாய் நின்ற பிரான்
மருவாருங் குழல் உமையாள் மணவாளன் மகிழ்ந்து அருளும்
திருவாரூர்ப் பிறந்தார்கள் திருத் தொண்டு தெரிந்து உணர
ஒரு வாயால் சிறியேனால் உரைக்கலாம் தகைமை அதோ.
1
4164
திருக் கயிலை வீற்று இருந்த சிவபெருமான் திருக் கணத்தார்
பெருக்கிய சீர்த் திருவாரூர்ப் பிறந்தார்கள் ஆதலினால்
தருக்கிய ஐம் பொறி அடக்கி மற்றவர்தந் தாள் வணங்கி
ஒருக்கிய நெஞ்சு உடையவர்க்கே அணித்து ஆகும் உயர் நெறியே.
2
திருச்சிற்றம்பலம்


11.5 முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்
4165
எப்போதும் இனிய பிரான் இன் அருளால் அதி கரித்து
மெய்ப் போத நெறி வந்த விதி முறைமை வழுவாமே
அப்போதைக்கு அப்போதும் ஆர்வம் மிகும் அன்பினராய்
முப்போதும் அர்ச்சிப்பார் முதல் சைவராம் முனிவர்.
1
4166
தெரிந்து உணரின் முப்போதும் செல் காலம் நிகழ் காலம்
வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின்
விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன அப்
பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ.
2
4167
நாரணர்க்கும் நான் முகர்க்கும் அறிய ஒண்ணா
    நாதனை எம் பெருமானை ஞானம் ஆன
ஆரணத்தின் உள்பொருள்கள் அனைத்தும் ஆகும்
    அண்ணலை எண்ணிய காலம் மூன்றும் அன்பின்
காரணத்தால் அர்ச்சிக்கும் மறையோர் தங்கள்
    கமல மலர்க் கழல் வணங்கிக் கசிந்து சிந்தைப்
பூரணத்தால் முழு நீறு பூசி வாழும் புனிதர் செயல்
    அறிந்தவாறு புகலல் உற்றேன்.
3
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம்
4168
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன்
    எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
    கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம்
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி
    ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம்
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது
    நம் இரு வினைகள் கழிவதாக.
1
4169
அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து
    ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள்
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று
    அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த
    சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு
    இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும்.
2
4170
ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு
    அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம்
    உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச்
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம்
    அநு கற்பம் தில்லை மன்றுள்
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக்
    கூத்தர் மொழி வாய்மை யாலே.
3
4171
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும்
    ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும்
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி
    கைகள் சுட்ட எரி பட்ட நீறும்
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை
    திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி
    தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும்.
4
4172
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே
    இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர்
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை
    அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும்
    மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர்
    அடியார் அணிவர் நன்மையாலே.
5
4173
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின்
    நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
    நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில்
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி
    அதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர்
    முழுவதும் மெய் அணிவர் அன்றே.
6
திருச்சிற்றம்பலம்


11.7 அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
4174
மூவேந்தர் தமிழ் வழங்கு நாட்டுக்கு அப்பால்
    முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
நா வேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
    நல் தொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூ வேய்ந்த நெடும் சடை மேல் அடம்பு தும்பை
    புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல் கொடியான் அடிச்சார்ந்தாரும்
    செப்பிய அப்பாலும் அடிச் சார்ந்தார் தாமே.
1
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
4175
செற்றார் தம் புரம் எரித்த சிலையார் செல்வத்
    திருமுருகன் பூண்டியினில் செல்லும் போதில்
சுற்றாரும் சிலை வேடர் கவர்ந்து கொண்டதொகு
    நிதியின் பரப்பு எல்லாம் சுமந்து கொண்டு
முற்றாத முலை உமையாள் பாகன் பூத முதல்
    கணமே உடன் செல்ல முடியாப் பேறு
பெற்றார் தம் கழல் பரவ அடியேன் முன்னைப்
    பிறவியினில் செய்த தவம் பெரியவாமே.
2
திருச்சிற்றம்பலம்
பத்தராய்ப் பணிவார் சருக்கம் முற்றிற்று.

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com