| சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் | 
| பன்னிரெண்டாம் திருமுறை | 
| இரண்டாம் காண்டம் | 
| 11. பத்தராய்ப் பணிவார் சருக்கம் | 
| 11.1 பத்தராய்ப் பணிவார் புராணம் | 
4152 
ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் 
கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று 
ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து 
பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார். | 
1 | 
4153 
தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் 
யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து 
பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் 
மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார். | 
2 | 
4154 
அங்கணனை அடியாரை ஆராத காதலினால் 
பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் 
பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் 
தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார். | 
3 | 
4155 
யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் 
பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் 
காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் 
போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால். | 
4 | 
4156 
சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் 
அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் 
கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் 
செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள். | 
5 | 
4157 
ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி 
பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை 
மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் 
கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார். | 
6 | 
4158 
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் 
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் 
மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை 
குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார். | 
7 | 
4159 
சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் 
பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் 
அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் 
பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார். | 
8 | 
| திருச்சிற்றம்பலம் | 
| 11.6 முழுநீறு பூசிய முனிவர் புராணம் | 
4168 
ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் 
    எம் பெருமான் நீர் அணிந்த வேணிக் 
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த 
    கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம் 
ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி 
    ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம் 
மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது 
    நம் இரு வினைகள் கழிவதாக. | 
1 | 
4169 
அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து 
    ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் 
இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று 
    அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று 
உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த 
    சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா 
எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு 
    இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும். | 
2 | 
4170 
ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு 
    அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த 
நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் 
    உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச் 
சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் 
    அநு கற்பம் தில்லை மன்றுள் 
வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக் 
    கூத்தர் மொழி வாய்மை யாலே. | 
3 | 
4171 
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் 
    ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் 
இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி 
    கைகள் சுட்ட எரி பட்ட நீறும் 
உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை 
    திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி 
மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி 
    தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும். | 
4 | 
4172 
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே 
    இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர் 
அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை 
    அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி 
முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் 
    மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி 
நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் 
    அடியார் அணிவர் நன்மையாலே. | 
5 | 
4173 
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் 
    நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை 
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் 
    நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில் 
பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி 
    அதளின் உடையானைப் போற்றி நீற்றை 
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் 
    முழுவதும் மெய் அணிவர் அன்றே. | 
6 | 
| திருச்சிற்றம்பலம் |